(கலாத்தியர் 5:16-26, 6:6-18)
“பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு. இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால் நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. மாமசத்தின் கிரியைகள் வெளியரங்க மாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லி சூனியம், பகைகள், விரோதங்கள் வைரக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப் பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னது போல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபெறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்படவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். கோபமூட்டாமலும், ஒருவர் மேல் ஒருவர் பொறாமைக் கொள்ளாமலும் இருக்கக்கடவோம்.
“மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப் படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக் கடவன். மோசம் போகாதிருங்கள். தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். நன்மை செய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம், ஆகயால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக் கடவோம். என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினென்று பாருங்கள். மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம் பண்ணுகிறார்கள். விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும் அவர்கள் உங்கள் மாம்சத்தைக் குறித்து மேன்மை பாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள். நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டியிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிக்கிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை. விருத்த சேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம். இந்தப் பிரமாணத்தின்படி நடந்து வருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும் சமாதானமும் இரக்கமும் உண்டயிருப்பதாக. இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்தில் தரித்துக் கொண்டிருக்கிறேன். சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்."
ஆவியில் நடக்க நாம் என்ன செய்யவேண்டும்?
அழகிய நற்செய்தியின் படி நடந்து அதனைப் பிரசங்கிக்க வேண்டும்.
அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் பரிசுத்த ஆவியானவரைக் குறித்து எழுதியுள்ளான். கலாத்தியர் 5:13-14 இல் அவன் கூறுகிறான். “சகோதரரே நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அனுசரியாமல், அன்பினாலே, ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.”
சுருக்கமாக, அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிப்பதன் மூலம் இரட்சிக்கப்ட்டு பாவங்களிலிருந்து விடுதலையாகியமையால், இந்த விடுதலையை மாம்ச இச்சைக்கேதுவாக நம்மை உட்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. ஆனால் அன்பின் மூலம் ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்து அழகிய நற்செய்தியை பின்பற்ற வேண்டும். நம்மை எல்லாப் பாவங்களிலிருந்தும் கர்த்தர் இரட்சித்தமை போன்று, நற்செய்தியை நாம் பிரசங்கிப்பது ஏற்றதாயிருக்கிறது. பவுல் மேலும் கூறினான் “நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப் படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்” (கலாத்தியர் 5:15).
பரிசுத்த ஆவியானவரில் நிறைந்திருக்கும் படியாக ஆவிக்குள் நடவுங்கள்
கலாத்தியர் 5:16 இல் பவுல் கூறுகிறான். “பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துக்கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்.” மேலும் 22-26 ஆம் வசனங்களில் அவன் கூறுகிறான். “ஆவியின் கனியோ, அன்பு சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். வீண் புகழ்ச்சியை விரும்பாமலும் ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர் மேல் ஒருவர் பொறாமைக் கொள்ளாமலும் இருக்கக் கடவோம்.” இங்கே பவுல் கூறுவதென்னவெனில், நாம் ஆவியானவரில் நடந்தால் நாம் ஆவியின் கனிகளைப் பெற்றிருப்போம். பரிசுத்த ஆவியானவர் நாம் ஆவியில் நடப்பதையே விரும்புகிறார். ஆனால் நாம் மாம்சத்தின்படியே வாழுகிறோம்.
மனிதர்களாகிய நாம் சரீரத்தினால் பிறந்தோம் எனவே அதனால் ஆவிக்குரிய கனிகளை கொடுக்க முடியாது. நாம் ஆவிக்குள் நடக்க முயற்சி செய்தாலும் கூட, நம் இயற்கை சுபாவத்தை மாற்ற இயலாது. அதனால் தான் அழகிய நற்செய்தியை விசுவாசித்து பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்வதைப் பெற்றுக் கொண்டவர்களால் மட்டுமே ஆவிக்குள் நடந்து ஆவிக்குரிய கனிகளை கொடுக்க முடிகிறது.
வேதாகமம் நம்மை ஆவியானவரில் நடக்கும் படி கூறும்போழுது, அதன் பொருள், மற்றவர்களும் தம் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறும்படி அழகிய நற்செய்தியை நாம் அவர்களுக்கு பிரசங்கிக்க வேண்டும் என்பதாகும். இந்த அழகிய நற்செய்திக்காக நாம் வாழ்ந்தால், நாம் ஆவிக்குரிய கனிகளைக் கொடுப்போம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அது மனித சுபாவத்தை மாற்றுவது குறித்தல்ல. நாம் இந்த அழகிய நற்செய்தியுடன் நடக்கும்பொழுது, ஆவிக்குரிய கனிகளை நாம் கொடுப்போம், அவையாவன, அன்பு, சந்தோஷம், சமாதானம், தயவு, நீடிய பொறுமை, இச்சையடக்கம் போன்றவையாகும். ஆவியின் கனியானது மற்றவர்களை பாவங்களிலிருந்து இரட்சிக்கப்பட்டு நித்திய ஜீவனை அடைய உதவிசெய்ய உதவுகிறது.
மாம்சத்தின் இச்சைக்கும் ஆவியானவரின் விருப்பத்திற்குமுள்ள போட்டி
பவுல் கூறினான், “மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்ய வேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது” கலாத்தியர் 5:17). பாவ விடுதலைப் பெற்ற நாம், மாம்சத்திற்குரிய இச்சையையும், ஆவியையும் ஒரே சமயத்தில் பெற்றிருப்பதால், இவை இரண்டும் எப்போதும் ஒன்றுக்கொன்று எதிரானவைகளாக இருக்கின்றன. இதன் விளைவு யாதெனில் இவற்றில் யாதொன்றினாலும், நம் இருதயங்கள் முற்றிலும் நிறையாது.
நம்மிருதயத்தினுள்ளிருந்து அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்கவும் கர்த்தருக்கு ஊழியம் செய்யவும் நாம் விரும்பும் படியாக பரிசுத்த ஆவியானவர் வழி நடத்துகிறார். ஆவிக்குரிய வேலைகள் செய்வதில் ஈடுபடுவதற்கு அதிக ஆர்வத்தை அது தருகின்றது. கர்த்தரின் அழகிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் மனிதர்களை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கவும் நமக்கு உதவுகிறார்.
அதே நேரத்தில், நம் ஆசைகள், சரீர இச்சைகளை கலக்கிவிடுகின்றன. ஆகவே, நாம் ஆவியினுள் நடக்க முடியாது. இதுவே ஆவிக்கும் மாம்ச இச்சைக்கும் நித்தியமாக நடைபெற்று வரும் யுத்தமாகும். ஒரு மனிதன் மாம்ச இச்சையினுள் உட்கொள்ளப்படும்போது, மாம்சத்தைத் திருப்தி படுத்தும் காரியங்களைச் செய்வதில் முடிவடைகிறான். சரீரமானது ஆவிக்கெதிரான அதன் ஆசைகளை நிறுவுகிறது. அவை ஒன்றுக்கொன்று எதிரானவைகளாக இருப்பதனால், நாம் நினைத்த காரியங்களை நாம் செய்யாமல் போகலாம்.
அப்படியானால், ஆவிக்குள் நடப்பதில் அடங்கியுள்ள காரியம் என்ன? எத்தகையக் காரியங்கள் கர்த்தரைப் பிரியப் படுத்துகின்றன? கர்த்தர், அழகிய நற்செய்தியை பிரசங்கிப்பதும், பின்பற்றுவதுமே ஆவியில் நடக்கும் வாழ்வாகும் என்கிறார். பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ் செய்யப் பெற்றவர்களுக்கு, அவர்கள் ஆவிக்குரிய வாழ்வு வாழும்படியாக, ஆவியில் நடப்பதற்கேதுவான இதயங்களை அவர்களுக்களிக்கிறார். ஆவியில் நடப்பதன் மூலம் ஆவிக்குரிய கனிகளை கொடுக்க வேண்டும் என்று கர்த்தர் நமக்களித்த கட்டளையானது நமக்கு எச்சரிக்கையாகவும் அழகிய நற்செய்தியை பிரசங்கிப்பதன் மூலம் மற்றவர்களை அவர்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்க நமக்கிட்ட கட்டளையாகவும் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவரில் நடத்தல் என்பது கர்த்தருக்கு பிரியமான வாழ்வு வாழவேண்டுமென்பதே.
நாம் ஆவியில் நடப்பதற்கு முதன்முதலில் பரிசுத்த ஆவியானவர் நம்மில் வாசஞ் செய்யப் பெற்றிருக்க வேண்டும். நாம் பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசஞ் செய்ய வேண்டுமென விரும்பினால் முதலில் அழகிய நற்செய்தியை விசுவாசிக்க வேண்டும். நம் முழு இருதயத்தோடும் அழகிய நற்செய்தியை நாம் விசுவாசிக்கவில்லையென்றால், நாம் பரிசுத்த ஆவியானவரை வாசஞ் செய்யும் படி பெறுவதோ அல்லது பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவதோ நிகழாது. அதன்பொருள் நாம் ஆவியில் நடக்க முடியாதென்பதாகும்.
கர்த்தருக்கு பணிசெய்யவும் அவருக்கு மகிமையைச் சேர்க்கவும், அழகிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான ஆசையையும் ஆவியானவர் தருகிறார். இந்த ஆசை கர்த்தருக்காக அர்ப்பணிக்கப்பட்ட இருதயங்களிலிருந்து வருகிறது. அது உலகமுழுவதற்கும் அழகிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதாயிருக்கிறது. அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்க எது வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற சித்தமும் அத்தகைய இருதயத்திலிருந்து வருகிறது. யாரெல்லாம் அழகிய நற்செய்தியை விசுவாசித்து பாவமன்னிப்பு பெற்றபின் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டார்களோ அவர்களால் நற்செய்தியைப் பிரசங்கிக்க தம்மை அர்ப்பணித்துக்கொள்ளும்படி ஆவியில் நடக்க இயலும்.
யாரெல்லாம் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ்செய்யப் பெற்றார்களோ, அவர்கள் சரீரத்தில் இச்சை இருந்தாலும் கூட பரிசுத்த ஆவியானவர் அவர்களில் வாசஞ்செய்வதால் அவர்கள் பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்ப்படிந்து ஆவியில் நடப்பார்கள். பவுல் கூறினான், “ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள்.” இதற்கான அவன் பொருள் யாதெனில், இயேசு நமக்களித்த நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை நாம் பிரசங்கித்து மற்றவர்கள் தம் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெற நாம் உதவவேண்டுமென்பதே.
சில சமயங்களில் ஆவிக்கேற்றபடி நடக்கையில் நம் சரீரத்தைப் பொருத்தும் நடக்கிறோம். மாம்சத்திள் இச்சையும் ஆவியின் விருப்பமும் ஒன்றுடன் ஒன்று நம் வாழ்வில் சண்டையிடுகின்றன. ஆனால் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியது என்னவெனில், யாரெல்லாம் பரிசுத்த ஆவியானவர் வாசஞ் செய்யப்¦ பற்றார்களோ அவர்கள் ஆவிக்கேற்றபடி நடக்கும் ஒரு வாழ்வை வாழ வேண்டும். இந்த வழியின் மூலமே கர்த்தரின் ஆசீர்வாதம் நிரம்பிய ஒரு வாழ்வை வாழமுடியும். பரிசுத்த ஆவியானவரைத் தம்மில் வாசஞ் செய்யப் பெற்றவர்கள் ஆவிக்குரிய கனி கொடுக்க மறுத்தார்களானால், மாம்ச கனி கொடுத்து அழிந்து போவார்கள். அவர்கள் கனி அழுகிப்போவதும் பரிதாபமுடையதாகவும் இருக்கிறது. இங்கே நாம் ஆவிக்கேற்றபடி நடக்கும் வாழ்விற்கான காரணம் பொதிந்திருக்கின்றது.
நாம் “ ஆவிக்குள் நடப்பது” என்று கேட்டிருக்கலாம். ஆனால், நம்மில் சிலர் நினக்கலாம், “பரிசுத்த ஆவியானவரை என்னுள் நான் உணராதபோது, நாம் அதையெப்படிச் செய்ய முடியும்?” பரிசுத்த ஆவியானவர் நம்மில் சஞ்சரிக்கிறார் என்று கர்த்தர் நேரடியாகத் தோன்றி நம்மிடம் பேசினால் மட்டுமே அதனை உணர்ந்து கொள்ள முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். இவையெல்லாம் தப்பர்த்தங்களாகும். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்காக வாழ்வதற்கான ஆசையை ஆவியானவர் தருகிறார்.
சிலவேளைகளில் அவர் நம்மில் சஞ்சரிப்பது நிச்சயமாக தெரியும். ஆனால் நாம் நம் சரீரத்திற்கேற்றபடி நடப்பதால் அவரை உணரமுடிவதில்லை. சிலர் அவர் நம்முள் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கலாம். அவர்களே பரிசுத்த ஆவியானவரைப் பெற்று சரீரத்தின் படி நடப்பவர்கள்.
இந்த மனிதர்கள் அவர்கள் சரீரத்தை திருப்தி செய்து அது கூறுவதைச் செய்கிறார்கள். ஆனால் சரீரத்தின் தேவைகள் அதிகமதிகமாய் உயர்ந்து கொண்டே போவதால் முடிவில் துன்பப்படுகிறார்கள். பரிசுத்த ஆவியானவரை தம்மில் வாசஞ் செய்யப்பட்ட சிலர் மாம்ச இச்சையின்படி வாழ விழைகிறார்கள். அப்படிச் செய்வது இயற்கையானது என்றும் நினக்கிறார்கள். ஆனால் சரீரத்திடம் தம்மை ஒப்புக்கொடுத்தவர்கள் மாம்சத்தின் அடிமைகளாகி விடுகின்றனர்.
ஆவியின் படி வாழும்படி கர்த்தர் கூறுகிறார். இதன் பொருள் யாதெனில் அழகிய நற்செய்திக்கு பணிபுரிவதாகும். மேலும் அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவிக்கு நம்மை முற்றிலும் ஒப்புக் கொடுக்க வேண்டுமென்பதும் இதன் பொருளாகும். நற்செய்தியில் மகிழ்ந்து அதனில் வாழ்வது ஆவிக்கேற்றபடி வாழ்வதாகும். ஆவிக்குள் நடப்பது என்றால் என்ன பொருள் என்று அறிந்து அதற்கேற்றபடி நாம் வாழ வேண்டும். நீங்கள் ஆவிக்கேற்றபடி நடக்கிறீர்களா?
பரிசுத்த ஆவியானவர் தன்னுள் வாசஞ்செய்யப்பெறாத ஒருவனால் ஆவிக்கேற்றபடி நடக்க முடியுமா?
யாரெல்லாம் மறுபடியும் பிறக்காதவர்களோ அவர்களுக்கு ஆவிக்குள் நடப்பது என்றால் என்ன பொருள் என்று தெரியாது. இப்படியாக, நிறைய மக்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற முயன்று அதற்காக அவர்கள் சொந்த வழியில் காத்திருக்கிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொள்ள விரும்புவது பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவதற்கு சமமாகும் என்றெண்ணுகிறார்கள்.
குறிப்பாக, சில குறிப்பிட்ட ஆலயங்களில், சில ஆராதனைச் செய்ய மக்கள் கூடும்போது, போதகர் சத்தமிட்டு ஜெபிக்கிறார். உடனே எல்லோரும் கர்த்தரின் பெயரை சத்தமிட்டு கூப்பிடுகிறார்கள். அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரம்பியதைப் போன்று பல பாஷைகளில் பேசத் தொடங்குகின்றனர். ஆனால் யாராலும், அவர்களாலும் கூட, தாம் என்ன சொல்லுகிறோம் என்று அறிந்துகொள்ள முடியாது. இடையில் அவர்களில் சிலர் தரையில் விழுந்து அவர்கள் உடம்பு வலிப்பு வந்தது போன்று நடுங்குகிறது. நிச்சயமாக அவர்கள் பிசாசு பிடித்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தாம் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றதாக நினைக்கிறார்கள். திடீரென “கர்த்தரே! கர்த்தரே!” என்று அவர்கள் கூச்சலிடும் சப்தம் வருகின்றது. அவர்கள் கர்த்தரை அழைத்து, கண்ணீர் விட்டு தம் கைகளைத் தட்டுகிறார்கள். இந்த சம்பவம் “பரிசுத்த ஆவியானவரில் நிறைவது” என்று வழக்கமாகக் கூறப்படுகின்றது.
பிரசங்க மேடையை ஓங்கித் தட்டிக்கொண்டு போதகர் பல பாஷை பேசுகிறார். மக்கள் “கர்த்தரே! கர்த்தரே!” என்று கூச்சலிடுகிறார்கள். அவர்கள் இப்படிப்பட்ட சூழ்நிலையை விரும்புகிறார்கள். மேலும் சிலர் தாம் ஏதேன் தோட்டத்தில் உள்ள நன்மை தீமை அறியத்தக்க மரத்தைக் கண்டதாகவும் இயேசுவின் முகத்தைக் கண்டதாகவும் கூறுகின்றனர். அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெறும் வழியாகவும், அவரால் நிரம்பப்படுவதையும் அவரில் நடப்பதையும் மேற்கண்ட சம்பவங்கள் வழியாகப் பெறலாம் என்று தப்பர்த்தம் செய்துள்ளனர். அவர்களுடைய தவறாக வழிநடத்தப்பட்ட செய்கைகள், கர்த்தரின் வார்த்தையையும் பரிசுத்த ஆவியானவரையும் குறித்த அவர்களின் தவறான அறிவின் விளைவாகும்.
“ஆவிக்கேற்றபடி நடங்கள்.” மறுபடியும் பிறந்தவர்களிடம் கர்த்தர் கூறுவது இதுவே. அதன் பொருள் அவருக்கு பிரியமானவைகளைச் செய்வதே. பவுல் மாமிசத்தின் செய்கைகளையும் ஆவிக்குரிய கனிகளையும் ஒப்பிடுகிறான். அவன் கூறினான், “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை” (கலாத்தியர் 5:22-23).
“ஆவிக்கேற்றபடி நடப்பதென்பது” அழகிய நற்செய்தியை பிரசங்கித்து மற்றவர்களை பாவங்களிலிருந்து இரட்சிப்பதாகும். நாம் அப்படிச் செய்தோமானால், நாம் ஆவியின் கனிகளை கொடுக்கிறவர்களாயிருப்போம். ஆவியின் கனிகள் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவையாகும். மேலும், அழகிய நற்செய்தியின் படி வாழ்ந்தால் மட்டுமே இந்த ஆவியின் கனிகளை நாம் கொடுக்க முடியும். ஓருவன் அழகிய நற்செய்தியைப் பிரசங்கித்து சேவைச் செய்வானானால், அதற்காகத் தன்னைப் பலி கொடுத்தானானால், அவன் பரிசுத்த ஆவியால் நிரம்பிய ஆவிக்குரிய வாழ்வை வாழ்வான்.
ஆவிக்குரிய கனியான “நற்குணம்” என்பதன் பொருள் நல்ல காரியங்களைச் செய்வதென்பதாகும். நல்லொழுக்கம் என்றும் பொருள்படும். அழகிய நற்செய்தியிக்காக நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து மற்றவர்களின் நலனுக்காக எதையாவது செய்வது நற்குணமாகும். கர்த்தரின் பார்வையின் மிக உயர்ந்த நற்குணம் யாதெனில் மற்றவர்களுக்கு நன்மையாகும் விதத்தில் அழகிய நற்செய்தியை போதிப்பதே.
மேலும், “தயவு” எனப்படுவது மக்களை அரவணைப்பதாக உள்ளது. மற்றவர்கள் மீது கிருபையுடனிருக்கிறவன் நற்செய்திக்கு பொறுமையுடனும் நற்குணத்துடனும் சேவை செய்து சமாதானமாக இருக்கிறான். ஆவியின் படி நடக்கிறவன் எவனோ அவன் கர்த்தரின் பணிகள் நிறைவேறுவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதுடன், அவனின் வேலையை நேசித்து, மற்றவர்களையும் நேசித்து எல்லாவற்றிலும் நம்பிக்கைக்கு பாத்திரமானவனாகவும் இருக்கிறான். யாரும் அதனைச் செய்தே தீரவேண்டும் என்று கூறாவிட்டாலும், பரிசுத்த ஆவியானவர் தன்னுள் வாசஞ்செய்யப் பெற்ற ஒருவன் தன் வேலை நிறைவேறும் வரை அதனைச் செய்யும் படி நம்பிக்கையுள்ளவனாகவும் இருக்கிறான். அவன் சாந்தமுள்ளவனாகவும் இச்சையடைக்க முள்ளவனாகவும் இருக்கிறான். அவனிடம் ஆவியின் கனி இருக்கிறது. யார் பரிசுத்த ஆவியானவரைத் தன்னுள் பெற்றிருக்கிறானோ, அவன் பரிசுத்த ஆவியானவருள் நடக்கவேண்டும். அவன் அப்படிச் செய்தால் மட்டுமே, அவனால் ஆவிக்குரிய கனியைக் கொடுக்க முடியும்.
ஆவிக்கேற்றபடி நீயும் நடந்தாயானால் உன்னாலும் ஆவிக்குரிய கனியைக் கொடுக்க முடியும். அப்படிச் செய்யவில்லையென்றால் மாமிச இச்சையின் படி வாழ்வதில் முடிவடைவாய். கலாத்தியர் 5:19-21 இல் வேதவசனம் கூறுகிறது. “மாமிசத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாரதனை, பில்லி சூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னது போல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன
மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாக இருக்கின்றன. மாம்சத்தின் முதல் வேலை யாதெனில் “விபசாரம்” இதன் பொருள் எதிர் பாலாரிடம் சரியில்லாத உறவுமுறை கொண்டிருப்பது என்பதாகும். இரண்டாவது “வேசித்தனம்” மூன்றாவது “அசுத்தம்” நான்காவது “காம விகாரம்” இதன் பொருள் காம இச்சை. ஐந்தாவது “விக்கிரகாராதனை” இதன் பொருள் கர்த்தரை ஆராதிப்பதற்கு பதிலாக சிலைகளை வணங்குதல். ஆறாவது “பில்லி சூனியம்” ஏழாவது “பகைகள்” பரிசுத்த ஆவியானவரின்றி ஒருவன் தன் மாமிசத்திற்கேற்றபடி நடப்பானால் அவன் பாவ சுபாவத்திற்கு ஏற்றவாறு மற்றவர்களை வெறுப்பது தவிர வேறு வழியில்லை. எட்டாவது “விரோதங்கள்” இதன் பொருள் யாதெனில் நம் நண்பர்கள் அல்லது குடும்பத்தாருடன் சண்டைப் போடுதல். மற்றவைகள் “பொறாமைகள், சண்டைகள், மற்றும் வெறிகள் ஆகும்.” இவையெல்லாம் மாம்சத்தின்படி நடப்பவர்களின் சுபாவங்களாக இருக்கின்றன.
மற்றது “பிரிவினை” ஆகும். ஒருவன் மாம்சத்தின் படி மட்டுமே நடந்தானானால், அவனால் ஆலயப் பணிகளைச் செய்ய முடியாது மாறாக தன் செந்த வழிகளில் நடக்கும் பொருட்டு ஆலயத்தை விட்டு இறுதியில் வெளியேறுவான். பதின் மூன்றாவது “மார்க்கப் பேதங்கள்” ஆகும். மாமிசத்தின் படி நடக்கிறவன் தன் சித்தத்தை திருப்திச் செய்ய அப்படிச் செய்கிறான். அத்தகைய வாழ்க்கை கர்த்தரின் சித்தத்திற்கு முற்றிலும் மாறானது. மேலும் இது அழகிய நற்செய்தியிலிருந்து திருப்பிவிடும். மார்க்க விரோதம் என்பது வேத சத்தியத்திலிருந்து விலகிப்போதல் என்பதாகும். யாரொருவன் கர்த்தரின் வார்த்தைகளை விசுவாசித்து ஆவிக்கேற்றபடி நடக்கிறானோ, அவன் கர்த்தரின் சித்தத்திலிருந்து திரும்பிப் போவதில்லை. “பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளும்” மாம்சத்தின் கிரியைகளாகும். மாமிசத்தின்படி நடப்பவர்களே இத்தகைய காரியங்களைக் கடைசியில் கடைப்பிடிக்கின்றனர். அதனாலேயே கர்த்தர் கூறுகிறார், “ஆவிக்கேற்றபடி நடந்துக் கொள்ளுங்கள்.” மறுபடியும் பிறந்தவர்களான நாம், ஆவிக்கேற்றபடி நடக்க வேண்டும்.
மறுபடியும் பிறக்காதவர்கள் எவரோ, அவர்களின் இருதயங்களில் மாம்ச இச்சைகளே நிறைந்திருக்கின்றன. அதனாலேயே அவர்கள் “வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை”, முதலியவற்றில் ஈடுபட்டிருக்கிறார்கள். மறுபடியும் பிறவாத போதகர்கள் “பில்லி சூனியத்தை” தம்மை பின் பற்றுவோரிடம் பயிற்சி செய்வதுடன் நிறையப் பணத்தைக் காணிக்கை கொடுக்கும்படி ஏவுகிறார்கள். யார் அதிகப் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு முக்கியக் கடமைகளையும் ஆலயத்தின் உயர்ந்த பதவிகளையும் அவர்களுக்கு கொடுக்கிறார்கள். மாம்சத்திற்கேற்றபடி வாழ்பவர்கள் தம் “பகையை” மற்றவர்களுக்கு காட்டுகிறார்கள். அவர்கள் ஆலயங்களை நிறைய பிரிவுகளாக பிரித்து, தம்முடைய பிரிவைக் குறித்து பெருமைப் பாராட்டி மற்றவர்களை வேதப்புரட்டர்கள் என்கிறார்கள். “சண்டைகள், வைராக்கியங்கள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்” ஆகியவையெல்லாம் மறுபடியும் பிறவாதவர்களின் இருதயங்களில் இருக்கின்றன. மாம்சத்தின்படி நடந்தால் பரிசுத்தவான்களாகிய நம்முடைய நிலைமையும் அதுவேயாகும்.
மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கனிகளைக் கொடுக்கும் படி ஆவியானவர் செய்கிறார்
மறுபடியும் பிறந்தவர்கள் அழகிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக வாழ வேண்டும். கர்த்தரின் ஆலயத்துடன் சேர்ந்து அழகிய நற்செய்திக்கும் வேலை செய்யவேண்டும், நாம் ஒன்று கூடி ஜெபிக்கவும், ஆவியின் அழகிய நற்செய்தியில் நடக்கும் ஒருவராக மாற நம் சக்தியையெல்லாம் அர்ப்பணிக்க வேண்டும். ஆவியில் நடக்கும் மக்கள், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதற்காக வாழுகிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சரீரப் பிரகாரமாக வாழுவதென்பது தனக்காக மட்டும் வாழும் ஒரு வாழ்வாகும். அதே சமயம் ஆவியினுள் நடப்பதென்பது மற்ற ஆத்துமாக்களை இரட்சிக்கும்படி பணி செய்து வாழ்வதாகும். மறுபடியும் பிறந்த அநேக கிறிஸ்தவர்கள் இவ்விதமாக அழகிய வாழ்வு வாழுகின்றனர். அவர்கள் மற்றவர்களின் நன்மைக்காக வாழுகின்றனர்.
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையினர் அழகிய நற்செய்தியைக் குறித்து எதுவும் கேள்விப்படாதவர்களாக உள்ளனர். ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள மக்களை நாம் நேசிக்கிறோம். ஐரோப்பா அமெரிக்கா மற்றும் எல்லாத் தீவுகளின் மக்களையும் நாம் நேசிக்கிறோம். அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை அவர்களுக்கு அறிமுகம் செய்வதன் மூலம் நம் அன்பை அவர்களுக்கு காட்டவேண்டும்.
நாம் ஆவிக்கேற்றபடி நடக்கவேண்டும். இதற்கெதிராக எந்த சட்டமும் இல்லை. “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிபட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” எந்த சட்டமாவது இதற்கு எதிரானதாக இருக்கமுடியுமா? இல்லை. நாம் கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டிய ஆவியின் சட்டம் இதுவே. பவுல் நம்மை ஆவிக்கேற்றபடி நடக்குமாறு கூறுகிறான். பாவிகளாகிய நமக்கு கர்த்தர் தம் உயிரைக் கொடுத்தது போல், மற்றவர்களுக்கு நாம் நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும். மற்றவர்களை அவர்களின் பாவங்களிலிருந்து இரட்சிப்பது ஆவியினுள் நடப்பதாகும். நாம் ஆவிக்கேற்றபடி நடக்க வேண்டும்.
பவுல் கலாத்தியர் 5:24-26 இல் கூறுகிறான். “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். நாம் ஆவியினாலேயே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர் மேல் ஒருவர் பொறாமைக் கொள்ளாமலும் இருக்கக்கடவோம்.” நாம் ஆவிக்குள் வாழ வேண்டுமானால், இழந்துபோன ஆத்துமாக்களை இரட்சிக்கவே வாழவேண்டும். கர்த்தர் நமக்களித்த பரிசுத்த ஆவியானவர் நம்மிருதயங்களில் இயேசுவுடன் வாழ வழி நடத்துகிறார். பரிசுத்த ஆவியானவரே அன்பின் கர்த்தர், கர்த்தர் நம்மை அவர் அன்பின் வாகனங்களாக பயன் படுத்துகிறார்.
பவுல் கூறினான், “கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்” (கலாத்தியர் 5:24). மறுபடியும் பிறந்தவர்கள் இயேசுகிறிஸ்துவுடன் மரித்தார்கள் என்றும் அவன் கூறினான். உண்மையாகவே மறுபடியும் பிறந்தவர்கள் இயேசுவுடன் ஏற்கெனவே மரித்துவிட்டனர். நாம் அதனை உணரமாட்டோம். ஆனால், இயேசுகிறிஸ்து நம் பாவக்கிரயமாக சிலுவையில் மரித்தபோது நாமும் அவருடன் இறந்தோம். வேறு வார்த்தைகளைல் கூறுவதானால், இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப் பட்டார் என்பதன் பொருள் நீங்களும் நானும் அவருடன் சிலுவையில் மரித்தோம் என்பதே. அவருடைய மரணம் நம் மரணமாகும், மேலும் அவருடைய உயிர்த்தெழுதல் நம் உயிர்த்தெழுதலை உறுதிச் செய்யும் அடையாளமாகும். நமது நம்பிக்கையின் மூலமாக நீங்களும் நானும் இயேசுவுக்குள் வாழவும் மரிக்கவும் செய்கிறோம். நம்மிடம் நம்பிக்கை இருக்கவேண்டும். நம்முடைய நம்பிக்கை ஆவிக்கேற்றபடி நம் நடப்பதற்கு வழி நடத்துகிறது.
ஆவிக்கேற்றபடி வாழ்வதற்கான வல்லமையை கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கிறார். ஆகவே, தம் பாவங்களிலிருந்து மன்னிக்கப்பட்ட யாவரும் ஆவிக்கேற்றபடி நடக்கவேண்டும். பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக் கொண்டவர்கள் தம் பாவங்கள் மன்னிக்கப்பட்டதைக் குறித்து நன்றியுடையவர்களாக இருத்தல் வேண்டும். மேலும், இழந்து போனவர்களிம் இரட்சிப்பினிமித்தம் அழகிய நற்செய்தியைப் பிரசங்கிக்க தம்மை அர்ப்பணித்துக் கொள்ளவேண்டும். ஒருவனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவன் மறுபடியும் பிறந்தவனாக இருந்தாலும், அவன் தன் மாம்ச இச்சைப்படி வாழ்ந்தால் அவன் கர்த்தரின் ஆலயத்திலிருந்து பிரிக்கப்படுவது மட்டுமின்றி அவரை சேவிக்கவும் இயலாதவனாவான். இயேசுகிறிஸ்து மீண்டும் வரும் நாள்வரை நீங்களும் நானும் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் வாழ்ந்திருக்க வேண்டும்.
வீண்புகழ்ச்சியை விரும்பாமல் பரிசுத்த ஆவியானவரின் முழுமையில் வாழ்ந்திருங்கள்
பவுல் கூறினான், “வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர் மேல் ஒருவர் பொறாமைக் கொள்ளாமலும் இருக்கக்கடவோம்.” வீண்புகழ்ச்சி என்றால் என்ன? அது மாம்ச இச்சையின்படி நடத்தலாகும். உலகில் வாழும் மக்களில் நிறைய பேர் தம் சொந்தப் புகழ்ச்சிக்காகவே வாழுகிறார்கள். அநேக மக்கள் பணத்தைச் சேர்த்து, அதிகாரத்திற்கு போட்டியிட்டு, உலகின் அழகை நேசித்து இப்பொழுது வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசுவாசம் இருப்பதில்லை, மேலும் காலம் செல்லச் செல்ல அவர்கள் அழுகி மறைந்து போகிறார்கள். அதனாலேயே தம் மாம்ச இச்சையின்படி நடக்கும் மக்கள் வீண்புகழ்ச்சிக்காரர் என்றழைக்கப்படுகின்றனர். மக்களிடம் பணமிருந்தாலும், அவர்களிருதயத்தில் உண்மையான சமாதானமும் திருப்தியுமிருக்கின்றனவா? மாம்சத்தின் கனி அழுகிப்போகும். உலகச் சம்பந்தமானவற்றால் மற்றவர்களின் ஆத்துமாக்களுக்கு எந்த பயனும் இல்லை. அவை தனக்கு மட்டுந்தான். அவை ஒருவனின் சொந்த சரீரத்திற்கு மட்டும் நல்லதாயிருக்கிறது.
வேதாகமம் கூறுகிறது, “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு, அதிகமாய்ப் பிசினித்தனம் பண்ணியும் வறுமயடைவாரும் உண்டு.” (நீதி மொழிகள் 11:24) மறுபடியும் பிறவாதவர்கள் அதிகப் பணத்தை தேக்கி வைக்கிறார்கள். உலகச் சம்பந்தமானவைகள் அவர்களுக்கு எல்லாமாக இருப்பதால், மற்றவர்களுக்கு உதவி செய்ய அவர்களுக்கு மனமிருப்பதில்லை. அதனாலேயே அவர்கள் தம் வாழ்வைக் குறித்து மட்டும் அக்கறை உள்ளவர்களாக உள்ளனர். வேதாகமம் கூறுகிறது, தன் தேவைக்கு அதிகமாக சேர்த்து வைப்பது சரியல்ல, அது வறுமைக்கு வழி நடத்துகிறது. மக்கள் தம் மாம்ச இச்சையின்படி நடக்கிறார்கள். அது திருடனுக்கு எதிர் சென்று மரணத்தில் முடிவடைவதையொத்த முடிவுக்கு ஒத்ததாகும். இவையெல்லாம் வீண்புகழ்ச்சியின் பலனாக வருபவை.
ஆவியின் விருப்பங்களைப் பின்பற்றுவதை நேசிப்போர்
பவுல் ஆவிக்குரிய வாழ்வு வாழ விரும்பினான். அவன் அப்படியேச் செய்தான். நாம் வேத வாக்கின் மூலம் சிறப்பாக வாழ்வது குறித்தும், அவன் போதித்தான். அவன் கலாத்தியர் 6:6-10 இல் கூறுகிறான். “மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப் படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக் கடவன. மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான். நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால், ஏற்ற காலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத் தக்க, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும் நன்மை செய்யக் கடவோம்.
கர்த்தரின் வார்த்தையை அறிந்தவர்கள் தம்மிடமுள்ள நல்லவைகளை தம் ஆசரியர்களுடன் பகிருமாறு பவுல் அவர்களுக்கு அறிவுரைக் கூறுகிறான். அவன் குறிப்பிடும் “ நல்லவைகள்” என்பவை ஆவிக்குள் நடக்கும் வாழ்க்கை மூலமாக இழந்துபோன ஆத்துமாக்களை இரட்சிப்பதாலும் நற்செய்தியை பிரசங்கிப்பதாலும் கர்த்தரைப் பிரியப்படுத்துவதாகும். மறுபடியும் பிறந்தவர்கள் எவர்களோ, அவர்கள் ஆவிக்குள் போதித்து அதன்படி நடக்கும், ஒரே சிந்தனையுள்ள, அன்பும் ஒரேமாதிரியான தீர்ப்புடையவர்களிடம் சேரவேண்டும்.
“உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்து கொடுக்கக்கடவன்” நன்மைகள் என்பதன் பொருள் ஆலயத்தின் மூலம் மற்றவர்களை இரட்சிப்பதாகும். ஒரே மாதிரியான மனதினாலும், ஒரே ஜெபத்தினாலும், அதே பக்தியுடனும், எல்லாவற்றையும் செய்யவேண்டுமென பவுல் கூறுகிறான். நாம் கர்த்தரின் பணியை ஒன்று சேர்ந்து செய்யவேண்டும்.
பவுல் கூறினான், “மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” இங்கு “பரியாசம் பண்ணுதல்” என்பதன் பொருள் “கிண்டல் அல்லது கேலி” என்பதாகும். ஆகவே, “மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார்” என்பதன் பொருள் கர்த்தரை கிண்டலோ கேலியோ செய்யக்கூடாது. சொல்லப்போனால், கர்த்தரின் வார்த்தைகளை இலகுவாக எடுத்துக்கொண்டு, அவனுடைய சொந்த வார்த்தைகளில் மொழி பெயர்த்து அவற்றை விசுவாசிக்கத் தவறுவது அவரைப் பரியாசம் பண்ணுவதாகும். பவுல் கூறினான். “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” இதன் பொருள் என்னவென்றால் எவன் மாம்ச பிரகாரமாக விதைக்கிறானோ அவன் அசுத்தத்தை அறுவைடச் செய்கிறான். ஆனால், ஆவியின் படி விதைக்கிறவனோ நித்திய ஜீவனைப் பெறுவான்.
அழகிய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின்படி நாம் வாழ்ந்தால் நாம் எதை அறுவடைச் செய்வோம்? நாம் நித்திய ஜீவனையும் நம் பாவங்களிலிருந்து இரட்சிப்பையும் பெறுவோம். மற்றவர்களின் ஆத்துமாக்கள் தம் பாவங்களிலிருந்து விடுதலைப் பெறும்படி வழிநடத்தி ஆவிக்குரிய கனியாகிய நித்திய ஜீவனை கர்த்தரின் ஆசீர்வாதம் மூலம் அறுவடைச் செய்வோம்.
தம் சொந்த சரீரத்திற்காக வாழ்பவர்கள் கதியென்ன? அவர்கள் அசுத்தத்தை அறுவடைச் செய்து முடிவில் மரணத்தைத் தவிர வேறெதையும் பெறமாட்டார்கள். அவர்கள் மரணத்திற்கு பிறகு அவர்களிடம் ஒன்றுமே இருப்பதில்லை. மனிதன் வெறுங்கையுடன் பிறந்து வெறுங்கையுடனே சாகிறான்.
அவன் மற்றவர்களை இரட்சிக்கும்படியாக வேலை செய்வானாகில், அவன் ஆவிக்குரிய கனியை அறுவடைச் செய்து நித்திய ஜீவனைப் பெறுவான். ஆனால் அவன் தொடர்ந்து மாம்ச இச்சைகளின்படி வாழ்வானானால், அவன் அசுத்தத்தை அறுவடைச் செய்வதில் முடிவடைகிறான். அவன் சாபத்தை அறுவடைச் செய்து அதனை மற்றவர்களுக்கும் அளிக்கிறான். ஆகவே, விசுவாசத்தில் வாழ்வதைக் குறித்து எல்லாம் தெரிந்த பவுல், மாம்சத்திற்கேற்றபடி நடக்கவேண்டாமென நமக்கு அறிவுரைக் கூறுகிறான்.
“நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்.” ஆவியின் படி நடந்த பவுல் கர்த்தரின் ஊழியனாவான். அவன் ஆவியின்படி நடந்தான் என்று வேதாகமத்தில் உள்ளதை மக்கள் பார்க்கும்போது, சிலர் இப்படி நினைக்கலாம். பரிசுத்த ஆவியானவர் நேரடியாக “பவுல் இடப்பக்கம் சென்று அவனை சந்திப்பாயாக.” அலலது “நீ இந்த மனிதனை தவிர்ப்பாயாக” என்று அவனுக்கு கட்டளையிட்டதாக நினைக்கலாம். ஆனால் இது உண்மையல்ல.
இரட்சிப்புக் குறித்த நற்செய்தியை பிரசங்கித்து மற்றவர்கள் தம் ஆத்துமாக்களைப் பாவங்களிலிருந்து இரட்சிக்கும்படி உதவி செய்து பவுல் ஆவிக்குள் நடந்தான். பவுல் ஆவிக்கேற்றபடி நடந்த மற்றவர்களுடன் சேர்ந்தும் கர்த்தரை சேவித்தான். கிறிஸ்தவர்களின் மத்தியில், ஆவிக்கேற்றபடி நடக்காமல் தம் மாம்ச இச்சையின்படி நடக்கும் மக்கள் அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் பவுலை வரவேற்க வில்லை. மாறாக அவனை எதிர்த்தும் அவதூறாகப் பேசவும் செய்தார்கள். இயேசுகிறிஸ்துவின் சீடர்களை எதிர்த்து சண்டையிட்டும் அவதூறு பேசியும் வந்தவர்கள் எவர்களோ அவர்களுடன் தான் செய்வதற்கெதுவுமில்லை என்று பவுல் கூறினான்.
நீ ஆவிக்குள் நடக்க வேண்டுமானால், நற்செய்தியின்படி நீ வாழவேண்டும். விருத்த சேதனம் பண்ணப்பட்டவர்கள் பவுலை விசாரணைக் குட்படுத்தினார்கள். கலாத்தியர் 5:1 இவ்வாறு கூறுகிறது. “சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்த சேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப் பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.” விருத்த சேதனம் பண்ணப்பட்டவர்கள் யாரெனில் அவர்கள் விருத்த சேதனத்தை கடைபிடிப்பதில் சிறந்தவர்களாயிருந்தனர், அவர்கள் கூறினர், “இயேசுவின் மீது விசுவாசம் வைத்து மறுபடியும் பிறந்தவன் ஆனாலும், அவன் விருத்த சேதனம் பண்ணப்படவேண்டும். அவன் தன் மாம்சத்தின் நுனித்தோலை வெட்டி விருத்தசேதனம் பண்ணப்படவில்லையென்றால், அவன் கர்த்தரின் பிள்ளை அல்ல.” அவர்கள் அவனை ஏன் விசாரணைக்குட் படுத்தினார்கள்? இயேசுவின் ஞானஸ்நானம் மற்றும் அவரின் சிலுவை இரத்தம் ஆகியவை மீதுள்ள விசுவாசத்தின் மூலம் மட்டுமே பாவ விடுதலையும் நித்திய ஜீவ ஆசீர்வாதமும் கிடைக்கின்றது என பவுல் விசுவாசித்தான். இதுவே அவன் பிரசங்கித்ததுமாகும்.
மக்களை நீதிமான்களாக்கும் விசுவாசம், உண்மையைப் படித்து அதனை பிரசங்கிப்பதன் மூலம் வருகின்றது. நீர் மற்றும் ஆவியைக் குறித்த சத்தியம் முக்கியமானது என்று பவுல் கருதினான். உண்மையைத் தெரிந்தவர்கள் யாரோ, அவர்களால் ஆவிக்கேற்றபடி நடக்க முடியும் என்றும் ஆகவே விருத்தசேதனம் பண்ணப்பட அவசியமில்லையென்றும் அவன் விசுவாசித்தான். இதனையே அவன் பிரசங்கித்தான். ஆனால், விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்கள், ஒருவனின் இரட்சிப்பின் நம்பிக்கையில் விருத்தசேதனமானது முக்கியமான அங்கம் என்று நம்பினார்கள். ஆயினும் கர்த்தர் கையளித்ததைத் தவிர வேறு நற்செய்தியில்லை, ஆகவே, அதில் நாம் எதையும் கூட்டவோ குறைக்கவோ கூடாது.
பவுல் ஆவிக்கேற்றபடி நடந்தபோது, அவன் அலட்சியம் செய்யப்பட்டு உடன் யூதர்களால் துன்புறுத்தப்பட்டான். “மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள கட்டாயம் பண்ணுகிறார்கள். விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக் கொள்ளாமலிருக்கிறார்கள். அப்படியிருந்தும் அவர்கள் உங்கள் மாம்சத்தைக் குறித்து மேன்மை பாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக் கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள். நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்போனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறை யுண்டிருக்கிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்த சேதனமும் ஒன்றுமில்லை. விருத்த சேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்” (கலாத்தியர் 6: 12-15). பவுல் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களுக்கு கூறுகிறான், “மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம் பண்ணுகிறார்கள்.”
மாமிச இச்சையின்படி நடக்கிறவர்களை பவுல் கடிந்துகொண்டான். அவர்கள் தம் மாமிச இச்சையின்படியே நடந்தார்கள். குறிப்பாக அவர்களைப் போன்ற அநேக மக்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் உறவைத் துண்டித்துக் கொண்டான். பவுல் கூறினான். “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மை பாராட்டாதிருப்பேனாக.” உலகின் பாவங்களையெல்லாம் தன் மீது சுமக்கும் பொருட்டு இயேசுகிறிஸ்து யோவானால் ஞானஸ்நானம் பெற்று பவுலையும் கர்த்தர் அழைத்த மற்ற எல்லா மக்களையும் இரட்சிக்கும்படியாக அவர் சிலுவையில் மரித்தார். பவுல் கூறினான். “அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்ல, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம்.” உலகத்திற்கு மரித்த பவுல், இயேசு கிறிஸ்துவின் மூலம் மறுபடியும் வாழ்ந்தான்.
நாம் உண்மையாகவே, இயேசுவிற்குள் மரித்தோம். ஆனால் சில சமயங்களில் இந்த உண்மையை மறந்து போகிறோம். நாம் அதை நம்ப வேண்டும். இந்த உண்மை மீது நமக்கு நம்பிக்கை இல்லையென்றால், நாம் மாம்ச இச்சையினாலும் குடும்பத்தினாலும் கட்டுண்டிருப்போம், இது கர்த்தருடனே கூட நடப்பதைத் தடைச் செய்கிறது. நம்முடைய மாம்சம் மிகவும் பலவீனமானது, நம் குடும்பங்கள் கூட அவரை நாம் பின்பற்ற உதவ முடியாது. கர்த்தரால் மட்டுமே நமக்கு உதவமுடியும், ஆனால் நாம் இப்பொழுது உலகத்திற்குச் சிலுவையிலறையப் பட்டிருக்கிறோம். ஒரு இறந்துபோன மனிதனால் எப்படி உலக மனிதர்களுக்கு உலகச் சம்பந்தப்பட்டவைகளில் உதவ முடியும்? இவ்வுலகத்திற்கு மரித்தவர்களால் இவ்வுலகத்திற்குரியவைகளை சொந்தமாக்க முடியாது.
இயேசு உயிரோடெழும்பினார். அவருடைய உயிர்த்தெழுதல் புதியதொரு ஆவிக்குரிய ஒரு வாழ்வை நாம் பெறும் விதமாக மறுபடியும் பிறக்க அனுமதித்தது. இங்கே நமக்கு புதிய பணிகளும், புதிய குடும்பமும், புதிய எதிர்பார்ப்பும் உள்ளது. நாம் மறுபடியும் பிறந்த மக்கள், பரலோக போர் சேவசகர்களாகிய நாம் வேதவாக்கினைப் பிரசங்கிக்கும்படியான பொறுப்பில் இருக்கிறோம். மற்றவர்கள் இரட்சிப்பை பெற்றுக் கொள்ளும்படியாக சரீரப்படியல்லாமல் ஆவிக்குரிய முறைகள் மூலமாக அவர்களுக்கு உதவியதாக பவுல் அறிக்கைச் செய்கிறான். தான் ஏற்கெனவே மரித்ததாகவும் இயேசுகிறிஸ்து மூலமாக மறுபடியும் பிறந்ததாகவும் அவன் கூறுகிறான். இது போன்ற நம்பிக்கையினால் அறிக்கைச் செய்யும் இத்தகைய மனிதர்களாகும்படியாக பாடுபடுவோமாக.
கலாத்தியர் 6:17-18 இல் பவுல் கூறினான், “இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக் கொண்டிருக்கிறேன். சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனே கூட இருப்பதாக. ஆமேன்.” தேவனாகிய இயேசுவின் அச்சடையாளங்களைப் பெற்றவனாக பவுல் இருந்தான். ஆவியின் படி நடப்பதற்கு அவன் தன் உடல் நலத்தில், தேவனின் பொருட்டு அக்கறைச் செலுத்தாதிருந்தான். அவன் சிறிது சிறிதாக பார்வையிழந்தமையால் அவனால் எழுதக் கூட முடியாமல் போயிற்று. ஆகவே, அவன் கர்த்தரின் வார்த்தைகளைப் பேசும் போது அவனின் துணைவர்களான டெர்சியஸ் போன்றவர்கள் பவுலின் சில நிருபங்களை எழுதினார்கள். அவன் சரீரப்பிரகாரமாக பலவீனனாக இருந்தாலும், அவன் ஆவிக்கேற்றபடி நடப்பதில் மகிழ்ச்சியடைந்து இப்படிக் கூறினான். “ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகிறது” (2 கொரிந்தியர் 4:16).
ஆவியில் நடக்கும் மக்களைப் போல் நாமிருக்க வேண்டுமென்று பவுல் நமக்கு அறிவுரை கூறுகிறான். அவன் மேலும், “ஆவிக்குள் நடப்பதென்பது நற்செய்திக்குள் வாழ்வது” என்றும் கூறுகிறான். ஆவிக்குள் நடப்பது என்றால் என்னவென்று நீங்களும் நானும் மனதில் கொள்ளவேண்டும். வீணாண காரியங்களை நாம் செய்யாது நற்செய்திக்கு சேவை செய்து வாழவேண்டும். நம்முடைய எஞ்சிய வாழ்நாட்களில் ஆவிக்கேற்றபடி நடப்போமாக.
நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதால் இப்பொழுது நம் இருதயங்களில் உண்மையான ஆவியானவர் உள்ளார். நற்செய்திக்கு ஒத்தவாறு நாம் ஜெபிக்கும் போது கர்த்தர் மகிழ்வுடன் பதிலளிப்பார். ஆவிக்குரிய கனிகளைப் பெற்றிருத்தல் என்பது ஆவிக்கேற்றபடி நடப்பதும் ஆத்துமாக்களை விடுவிப்பதுமாகும். நீங்களும் ஆவிக்குரிய கனிகளாகிய அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகியவற்றை, ஆவிக்கேற்றபடி நடந்து நற்செய்திக்காக வாழும்போது பெறுவீர்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைப் பிரசங்கிக்கும் பொருட்டு, நாம் பாடு அனுபவித்து, சாந்தமாக இருந்து தயவை பயிற்சி செய்து இழந்து போனவர்களுக்கு நன்மை செய்யவேண்டும்.
இழந்துபோன ஆத்துமாக்களை நல்லது செய்வதன் மூலமும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதின் மூலமும் அவர்கள் பரிசுத்த ஆவியானவர் தம்மில் வாசஞ் செய்யப் பெறச் செய்வதாலும் நமக்கு ஆவிக்குரிய கனிகள் கிடைக்கின்றன. இதுவே ஆவிக்குரிய கனிகளை நாம் கொண்டிருப்பதற்கும் ஆவிக்கேற்றபடி நாம் வாழவும் தேவையானதாகும்.