(வெளி 3:14-22)
“லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமேன் என்பவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும் நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியாவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; நான்: நீ ஐசுவரியவானாகும் படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாத படிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிங்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன். நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல், ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.”
விளக்கவுரை
வசனம் 14: “லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமேன் என்பவர் சொல்லுகிறதாவது”
நம் தேவன் இவ்வுலகிற்கு வந்து, கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றும் பொருட்டு, தன் மரணம் வரை பிதாவாகிய கர்த்தருக்கு கீழ்ப்படிந்தார். அவர் தந்தையின் சித்தமாயிருந்த அக்கட்டளைக்கு “ஆமேன்” எனக் கூறி கீழ்ப்படிந்தார். பிதாவாகிய கர்த்தரின் இராஜ்யத்தின் விசுவாசமிக்க ஊழியராய் நம் தேவன் இருந்தார். அவரே தேவகுமாரரென்பதற்கும் இரட்சகரென்பதற்கும் சாட்சி கூறும் உண்மையான சாட்சியாய் இருந்தார். ஆதியிலிருந்து படைப்பின் கர்த்தர் நம் தேவனே.
வசனம் 15: “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும்.”
லவோதிக்கேயா சபையின் ஊழியன் அழிந்துபோனவனாய் இருந்ததற்காக கர்த்தர் அவனைக் கண்டித்தார். இந்த ஊழியனுக்கு கர்த்தரின் கோபம் வேண்டியிருந்தது. கர்த்தருக்கு முன்பாக ஒரு நபரின் விசுவாசம் வெதுவெதுப்பானதாயிருந்தால் அவன்/அவள் தன் விசுவாசம் அனலாயிருக்கிறது அல்லது குளிராயிருக்கிறது என்று தெளிவுபடுத்தவேண்டும். கர்த்தர் நம்மிடமிருந்து எதிர்ப்பார்ப்பது தெளிவான வரையறுக்கப்பட்ட, அனலாகவோ, குளிராகவோ உள்ள விசுவாசமாகும். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிப்பதற்கு இந்த தெளிவான விசுவாசம் மிகவும் அவசியமாயிருக்கிறது.
கர்த்தரை விசுவாசிப்பதில், இரண்டு வகையான விசுவாசிகள் இருக்கின்றனர். ஒரு புறம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியை விசுவாசிக்கும் விசுவாசிகள் இருக்கின்றனர், அவர்கள் இதனைத் தவிர வேறெந்த நற்செய்தியுமில்லை என விசுவாசிக்கின்றனர். மறுபுறம், நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர வேறு நற்செய்திகளும் இருக்கின்றன என விசுவாசிப்பவர்களும் இருக்கின்றனர். இரண்டாவது வகையான விசுவாசிகள் விசுவாசம் அழிந்துபோனதாயிருக்கிறது.
இயேசுவை விசுவாசிப்பது மட்டும் போதுமானது என்றும் உண்மை நற்செய்தியையும் தவறான நற்செய்திகளையும் பிரித்துணர்வது அவசியமில்லை என்றும் அவர்கள் எண்ணுகின்றனர். இயேசு மட்டுமே ஒரே இரட்சகர் இல்லை எனவும், இரட்சிப்பை இவ்வுலகின் மற்ற மதங்களிலும் கூட காணலாம் என்றும் அவர்களில் சிலர் எண்ணுகின்றனர். அவர்களுடைய விசுவாசத்தைப் போன்று லவோதிக்கேயா சபை ஊழியனின் விசுவாசமும் வெதுவெதுப்பானதாயிருந்தது, அதில் உண்மையான நற்செய்திக்கும் தவறான நற்செய்திகளுக்கும் தெளிவான பிரிவு இருக்கவில்லை -அதாவது நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைத் தவிர வேறு நற்செய்திகள் இல்லை என அவன் நம்பவில்லை. இதனால் தான் இந்த ஊழியன் கர்த்தருக்கு கவலையை எடுத்து வந்து அவரின் கோபத்தைப் பெற்றுக்கொண்டான்.
வசனம் 16: “இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்.
நம் தேவனாகிய கர்த்தர் தம் ஊழியனிடமிருந்து தெளிவான விசுவாசத்தை எதிர்ப்பார்க்கிறார். அனலுமில்லாத குளிருமில்லாத ஒரு விசுவாசத்தை கர்த்தர் ஆதரிப்பதில்லை என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். ஆகவே, தேவனை நாம் விசுவாசிக்கும்போது, கர்த்தரின் வார்த்தையின்படி நம் இருதயங்களை தெளிவாக அமைத்து, அதனை விசுவாசிப்பதன் மூலம் அவர் சித்தத்தின்படி நிற்க வேண்டும். இப்படியாக மறுபடியும் பிறந்தவர்கள் வேதாகம நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் பக்கத்தில் தெளிவாக நிற்கவேண்டும். இந்நற்செய்தியுடன் மற்ற நற்செய்திகளையும் பரப்புபவர்களை விட்டுக் கொடுக்காது சந்திக்கவேண்டும். நீதிமான்கள் சரியான நற்செய்தியின் விசுவாசத்தின் பக்கத்தில் நிற்காவிட்டால் அவர்களை வாந்தி பண்ணிபோடுவதாக கர்த்தர் நம்மிடம் கூறுகிறார். அப்படியானால் உங்களின் நம்பிக்கை எப்பக்கத்திலிருக்கிறது?
வசனம் 17: “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப் படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும் நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியாவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்”
தேவன் மீதுள்ள தம் விசுவாசம் வெது வெதுப்பானதாயுள்ளவர்கள், அது நன்றாகவே இருப்பதாக எண்ணுவதால், அவர்கள் விசுவாசப் பஞ்சம் உடையவர்களாகவே தொடர்ந்தும் இருக்கின்றனர். லவோதிக்கேயா சபையின் ஊழியனும் அவிந்துபோன விசுவாசத்தைப் பற்றிக் கொண்டிருந்தமையால், அவனும் கூட, தன்னுடைய மோசமான நிலையை அறிந்து கொள்ளவில்லை. ஆகவே, தெளிவானதும், வரையறுக்கப் பட்டதுமான நம்பிக்கையைப் பெற, சத்தியத்திற்கான சோதனைகளையும் துன்பங்களையும் சந்திக்கவேண்டியவனாய் இருந்ததோடு, பொய்யர்களுடனான விசுவாசப் போரினுடாக செல்ல வேண்டியவனுமாயிருந்தான். அப்பொழுது மட்டுமே தான் எத்தனையாய் அவிசுவாசத்துடன், ஏழ்மையுடனும், நிர்வாணத்துடனும் இருந்ததை அவனால் கண்டுகொள்ள முடியும், நாம் தேவனுக்கு முன்பாக தெளிவான விசுவாசத்துடனிருக்க வேண்டும்.
வசனம் 18: “நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண் வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக் கொள்ளவும், நீ பார்வையடையும் படிக்கு உன் கண்களுக்குக் கலிங்கம் போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன்.”
அவனுடைய விசுவாசத்தை புடமிட்டதாக்குமாறு லவோதிக்கேயா சபையின் தூதனிடம் கர்த்தர் கூறினார். லவோதிக்கேயா சபையின் ஊழியன் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியில் உள்ள விசுவாசத்தை மீண்டும் கட்டியெழுப்பி, முழு நீதியின் ஆடையினால் தரிப்பிக்கப்பட வேண்டியவனாயிருந்தான். அவன் தன்னைப் பார்த்து, திரும்பி தன் விசுவாசத்தை தெளிவாக வரையறுக்க வேண்டியவனாயிருந்தான். அவன் தன் விசுவாசத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து, தன் விசுவாசத்தை புடமிடுவதின் மூலம் அவனின் நம்பிக்கையை முழுமயாக்கும் விதமாக படிக்க வேண்டியவனாயிருந்தான்.
கர்த்தர் அருளிய சத்திய நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியாகிய நற்செய்திக்காக, நசுக்கப் படுதலையும், துன்பப்படுதலையும் நீங்களும் கூட அனுபவிக்க வேண்டும். அப்பொழுது தான் நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியானது எத்தனை துல்லியமானது என்பதை நீங்கள் அறிவீர்கள். நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியின் மூலம் பெற்றுக்கொண்ட கர்த்தரின் நீதியைக் கடைபிடிக்க உங்களின் சொந்த மனித நீதியை உடைத்ததுண்டா? மனிதநீதியை உடைத்தவர்களுக்கு கர்த்தரின் நீதி எத்தனை துல்லியமானதென்றும் ஆசீர்வதிக்கப் பட்டதென்றும் தெரியும். தேவனை விசுவாசிக்கும் நம்பிக்கையில்லாவிட்டால் உங்கள் விசுவாச வாழ்வு சகிக்கமுடியாததாகிவிடும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும். ஆகவே, நமக்கு முன்பிருந்த அவரின் ஊழியர்களுக்கு தேவன் அளித்த விசுவாசத்திலிருந்து அதனைக் கற்று, உங்கள் அவிசுவாசத்தின் நிர்வாணத்தை மூடவேண்டும்.
உண்மை விசுவாசத்தைக் கற்றுக்கொள்ள அநேக தியாகங்களை செய்யவேண்டுமென்பதை நீங்கள் மறுக்கக்கூடாது. ஆவிக்குரிய பாடங்களின் விசுவாச நடைகளை, ஒவ்வொறு அடியாக பின்பற்றுவதன் மூலம் உண்மை விசுவாசத்தினை நாம் கற்று கொள்வதால் தியாகங்களை கூலியாக கொடுக்கவேண்டும். தேவனின் இராஜ்யத்தைக் கட்டுவதற்கும் நம் விசுவாசத்தை உறுதிபடுத்தியும் உலகின் பொருட்களை இழக்கவும், தேவனுக்காக எல்லாவற்றையும் வீசி எறியவும் தயாராக இருக்கவேண்டும்.
வசனம் 19: “நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்து கொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.”
அவருடைய அன்பினைத் தெரிந்திருந்தும், செய்கையில்லாத விசுவாசத்தை உடையவர்களாய் இருப்பவர்களை தேவன் கண்டித்து விரட்டுகிறார். ஆகவே தேவனால் நேசிக்கப்பட்டவர்கள் அவருக்காக கடினமாக உழைத்து, உண்மை விசுவாசத்துடன் அவரைப் பின்பற்றவேண்டும்.
வசனம் 20: “இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன்.”
கர்த்தரின் ஊழியர்களானவர்கள் இன்பத்திலும் துன்பத்திலும் தம் வாழ்வை அவருடன் பகிர்ந்து கொள்கின்றனர். தேவனுக்கு ஊழியம் செய்பவர்கள் தேவனின் வார்த்தையை எப்பொழுதும் விசுவாசித்து வாழுகின்றனர், அவர்களுடைய விசுவாசத்தின் மூலமாக, தேவன் தன் செய்கைகளை நிறைவேற்றுகிறார்.
வசனம் 21: “நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல், ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.”
இரத்தசாட்சியைத் தழுவ ஆயத்தமாக இருக்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்து உண்மை விசுவாசம் கிட்டுகிறது, அல்லது இழக்கப்படுகிறது. தேவனின் வார்த்தையை விசுவாசித்து சாத்தானை எதிர்த்துப் போராடுபவர்கள் வெற்றி பெற்று தேவனுடனே கூட மகிமைப் படுத்தப் படுவார்கள். பரிசுத்தவான்களும் கர்த்தரின் உழியர்களும் சாத்தானை எதிர்த்து நடைபெறும் ஆவிக்குரிய போரில் எப்போதும் ஈடுபட்டிருக்கிறார்கள். இப்போரில், தேவனின் வார்த்தையை விசுவாசித்து, அவர்களால் அவனை வெற்றி கொள்ளமுடியும். இப்படியாக சாத்தானுடனான போரில் அவனை வென்றவர்கள் தேவனுடனேகூட மகிமைப்படுத்தப்படுவார்கள்.
வசனம் 22: “ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.”
பரிசுத்தவான்கள் எப்பொழுதும் கர்த்தரின் குரலைக் கேட்டு பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டும். அவர்கள் அப்படிச் செய்யும்போது, அவர்களின் விசுவாசம் பரிசுத்த ஆவியானவருடன் நடக்கும் விசுவாசமாகிறது, ஆவிக்குரிய வெற்றி எப்பொழுதும் அவர்களுடையதே.